ஞாயிறு, 2 ஜூலை, 2017

மார்லன் பிராண்டோ


       

மனிதனெனும் வகையில் மார்லன் பிராண்டோ ஒரு தேவன்
நடிகனெனும் வகையில் அவன் ஒரு பிசாசு
                                  _பெர்னார்டோ பெர்ட்டுலூசி
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி பிறந்துவிட்டால் ஆஸ்கார் ஜுரம் உலக சினிமா வெளியில் பற்றிக்கொள்ளும். உலக திரைக்கலைஞர்களின் ஒருமித்த ஒரே கனவு ஆஸ்கார் மேடையில் ஏறுவதாகவே இருக்கும். ஆஸ்காருக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பிடித்து விட்டால் கூட போதும், திரைக் கலைஞனாக உருவெடுத்ததன் பலன் கிடைத்துவிடும் என ஏங்காகாதவர்கள் இல்லை. ஆனால் அத்தகைய ஆஸ்கார் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு, அதுவும் பிரதான விருதான சிறந்த நடிகர் பட்டம் கிடைத்தும் அதனை வாங்க மறுத்து உலகின் கவனத்தை ஒட்டு மொத்தமாக ஈர்த்தவர் மார்லன் பிராண்டோ. ஆஸ்கார் அறிவிக்கப்பட்டு வாங்க மறுத்த அல்லது அங்கு மறுத்த கலைஞர்கள் வுடி ஆலன், கோடார்ட், டுடி நிக்கலஸ் உட்பட ஏழு பேர். ஆனால் பிராண்டோ தவிர மற்ற ஆறு பேர் மறுத்ததற்கு அவர்களின் சொந்த பிரச்சினைகள் அல்லது அவர்கள் சார்ந்த தனியார் அமைப்புகளின் பிரச்சினைகள்  காரணம். ஆனால் பிராண்டோ மருத்தற்குக் காரணம்   தன் சொந்த பிரச்சினைக்காக அல்ல, புறக்கணிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக என்பது இன்னமும் ஆச்சர்யம் தரக்கூடிய ஒன்றுதானே..
      1973 ஆம் வருடம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் 45-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா. கிளிண்ட் ஈஸ்ட்வுட், சார்லஸ் ஹெஸ்டன், ரோஜர் மூர் உள்ளிட்ட ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் பங்கேற்கும் மாபெரும் திரை விழா இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளோடு கோலாகலமாகத் தொடங்குகிறது. 1972-ல் வெளியாகி உடனடியாக கிளாஸிக்அந்தஸ்தைப் பெற்று மிகப் பெரிய வெற்றியடைந்த தி காட்ஃபாதர்படத்துக்கு சிறந்த படம், தழுவல் திரைக்கதை, சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளில் 3 விருதுகள் கிடைக்கின்றன. சிறந்த நடிகருக்கான விருது, ‘தி காட்ஃபாதர்படத்தில் மிகப் பெரிய நிழல் உலக தாதாவாகவும் பொறுப்புள்ள குடும்பத் தலைவராகவும் கார்லோன் என்னும் அற்புதமான கதாபாத்திரத்தினை  தன் நடிப்பால் உயிரூட்டிய மார்லன் பிராண்டோவுக்கு அறிவிக்கப்படுகிறது. அவரது பெயரை அறிவிக்கிறார், நடிகர் ரோஜர் மூர். அனைவரின் கண்களும் மார்லன் பிராண்டோவைத் தேடுகின்றன. ஆனால், அவருக்குப் பதில் செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த நடிகை சாஷீன் லிட்டில்ஃபெதர் மேடையேறுகிறார்.
பிராண்டோவின் பிரதிநிதியாக சாஷீன் வந்திருக்கிறார் என்பதாகப் புரிந்துகொண்டு, ஆஸ்கர் விருதை அவரிடம் நீட்டுகிறார் ரோஜர் மூர். கையை உயர்த்தி அதை மென்மையாக மறுக்கும் சாஷீன், மைக் முன் சென்று நிற்கிறார். தனது கையில் இருக்கும் கடிதத்தைப் பார்வையாளர்களுக்கு வாசித்துக் காட்டுகிறார். விருதை வாங்க மறுத்து பிராண்டோ எழுதிய கடிதம் அது.
இந்த மாலைப் பொழுதில் மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரு விஷயத்தை அவர் சொல்லச் சொன்னார். அதாவது, தாராள மனதுடன் வழங்கப்படும் இந்த விருதை வாங்குவதை வருத்தத்துடன் அவர் மறுத்துவிட்டார். விருதை அவர் மறுக்கக் காரணம், திரைப்படத் துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதுதான்!என்கிறார். சாஷீன் நடிகை மட்டுமல்ல  நேஷனல் நேடிவ் அமெரிக்கன் அஃபர்மேடிவ் இமேஜ் கமிட்டிஎனும் அமைப்பின் தலைவரும் கூட!
பிராண்டோவின் தார்மிகக் கோபத்தைப் புரிந்து கொண்ட பார்வையாளர்கள் ஒரு சிலர் கைதட்டி வரவேற்கிறார்கள். நேரமின்மைக் காரணமாக அந்தக் கடிதம் அங்கு முழுமையாக படிக்கப்படவில்லை. உண்மையில் அக்கடிதத்தை சாஷீன் வாசிக்கையில் உணர்ச்சி பெருக்கெடுத்து கண்ணீர் அவர் இமைகளை முட்டுகிறது. அதுவும் கூட இன்னொரு காரணமாக இருக்கலாம். அதற்கு அடுத்த நாள் அந்தக் கடிதம் நாளிதழ்களில் முழுமையாக வெளியாகிறது.
அமெரிக்க மண்ணின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை முற்றிலுமாக ஒடுக்கி தங்கள் அதிகாரத்தை  நிறுவிய வெள்ளை இனத்தவர்கள், திரைப்படங்களிலும் அம்மக்களை மோசமான விதத்திலேயே சித்தரித்தனர். அத்துடன், செவ்விந்திய இன நடிகர்களை மோசமாக நடத்தினர்., அது மட்டுமல்லாமல்  அதே ஆண்டு பிப்ரவரி மாதம்  தெற்கு டகோடா மாகாணத்தின் வவூண்டடு நீ (Wounded Knee) பகுதியில் ஒக்லாலா இன நல்வாழ்வுத் துறைத் தலைவர் ரிச்சர்டு வில்ஸன்  ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி, அவருக்கு எதிராகப் போராடிய செவ்விந்திய இனப் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில், 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். ரே ராபின்சன் என்னும் மனித உரிமை ஆர்வலர் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டபொழுது மர்மமான முறையில் காணாமல் போனார். அவர் கொல்லப்பட்டிருப்பார் என்று சந்தேகிக்கப்பட்டது.  இந்தச் சம்பவத்தால் மனதளவில் பெரிதும் காயம்பட்டிருந்தார் பிராண்டோ. அவரது அறச் சீற்றத்தின் பின்னணி இதுதான். இந்த விருது மறுப்பு விளம்பரம் தேடி அல்ல மார்லன் மறுத்தப் பிறகுதான் வவுண்டட் நீ படுகொலைகளைப் பற்றி இந்த உலகம் அதிக கவலையுடன் விவாதிக்கத் தொடங்கியது.
போராட்டம் என்பது களத்தில் இறங்கி ஆயுதம் ஏந்துவது, கோஷம் எழுப்புவது மட்டுமல்ல. வீட்டுக்குள் உறைந்து கிடக்கும் உள்ளங்களை கிளறச்செய்து செய்து அவர்களை வெளியே இழுத்து வருவதும் கூட. அந்த வகையில் பெரிதாக கூக்குரலிடாமல் அமைதியாக சாதித்தார் மார்லன் பிராண்டோ.  
சமூக அக்கறை மிகுந்த ஹாலிவுட்  கலைஞரான மார்லன் பிராண்டோ பிறந்தது 1924 வருடம் ஏப்ரல் 3ம் தேதி,  அமெ‌ரிக்காவிலுள்ள நெப்ரஸ்கா மாநிலத்தில் உள்ள ஓமாஹா நகரில். அவரது அப்பா மார்லன் பிராண்டோவின் பெயரையே மகனுக்கும் வைத்தனர். தாய் டோரதி ஜூலியா பென்னிபேக்கர். இவரது மூதாதையர் ஜெர்மானிய பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள். மார்லன் பிராண்டோவின் அப்பா பூச்சிக்கொல்லி மருந்துகளை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் உயர்பதவி வகித்தவர். தொழிலின் நிமித்தம் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருந்ததால், தன் குழந்தைகளுக்காக அவர் நேரம் செலவழிக்கவில்லை. குடிப்பழக்கம் உடைய அவர் எப்போதாவது வீட்டுக்கு வரும்போது பிள்ளைகளிடம் ஒரு சர்வாதிகாரியைப் போல நடந்துகொண்டார். குழந்தைகளின் கண் முன்னே மனைவியை பெல்ட்டால் அடிப்பார். குழந்தைகளை மிரட்டி உருட்டுவதும் அவரது பழக்கம்.
பிராண்டோவின் அம்மா டோரத்தி ஜூலியா ஒரு நாடக ஆசிரியை. சிறந்த நாடக நடிகை. ஓமாஹா நகரின் புகழ்பெற்ற நாடகக் குழுவான ஒமாஹா கம்யூனிட்டி பிளே ஹவுசின்இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். இதனால் பிராண்டோவின் வீட்டுக்கு எந்த நேரமும் நாடகாசிரியர்களும், நடிகர்களும் வருவதும் செல்வதுமாக இருப்பார்கள்.
டோரத்தி ஜூலியா நவீன உலகின் அடையாளமாக திகழ்ந்தவர். ஆண்களைப் போல கிராப் முடியுடன், அரைக்கால் சட்டை, மேல்சட்டை அணிவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார். கூடவே  அளவுக்கதிகமான மதுப்பழக்கம், புகைப்பழக்கம் ஆகியவற்றை கொண்டிருந்தார். பிராண்டோவின் இளம் வயது செல்லப் பெயர் ‘புட்’ . அவரது சிறு வயது நண்பன் ஜார்ஜ் இங்க்லன்ட் பிராண்டோவுடனான நட்பின் நினைவுகளை விவரிக்கையில் சிறுவயதிலேயே பிராண்டோ அடுத்தவர்களைப் போல மிமிக்ரி செய்வதில் சிறந்தவராக இருந்தார் என்று குறிப்பிடுகிறார்.. பண்ணையில் உள்ள மாடு மற்றும் குதிரைகளைப் பார்த்து அவற்றைப் போல குரலெழுப்பிக்  காட்டுவார். தன் தாயின்  குடிப்பழக்கத்தைத் திசை திருப்ப பிராண்டோ அவ்வப்போது பலகுரல் நடிப்பினைச் செய்து வந்தார். அவரது அந்த கேளிக்கைகளை ரசிப்பதற்கென ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. தனது கவலைகளை அப்படித்தான் அவரால் மறக்கமுடிந்தது. ஆனால் பிராண்டோவின் இரண்டு மூத்த சகோதரிகளில் ஒருவரான ஜோசலின் பிராண்டோ தான் முதலில் நடிப்புத் துறையில் நுழைந்தவர். அவர் அமெரிக்க நாடகம் மற்றும் நடிப்புக் கல்லூரியில் சேர்ந்தார்.
அப்பொழுது மார்லன் கல்வி கற்க பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தார். பள்ளியில் பல பிரச்சனைகளை வீணே இழுத்து வந்ததால் அவரது தந்தை படித்த இராணுவப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஒரு முறை அவரது அறையில் இருக்க வேண்டிய மார்லன், நகரின் பிரதான வீதிக்கு ஊர்சுற்ற வந்தததின் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டார். மிலிட்டரி ஸ்கூலை விட்டு நின்ற பிராண்டோவைப் பார்த்து அவரது அப்பா ,”நீயெல்லாம் உருப்படவே மாட்டே!என்று சாபமிட்டார். தொடர்ச்சியான தோல்வி மற்றும் அவமானங்களினால்  இருபது வயதை தொடுவதற்கு முன்னரே தீவிர நரம்பு தளர்ச்சி ஏற்பட்டது. மனப்பிறழ்வுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று  மீண்டு வந்தார் பிராண்டோ. பின்னர் தனது சகோதரி படித்த அதே நாடகப் பள்ளியில் மார்லனும் சேர்ந்தார்.
அந்தப் பள்ளியில்தான் மார்லன் உற்சாகமாக இருக்க முடிந்தது. ரஷ்யக் கலைஞர் ஸ்தனிஸ்லாஸ் அறிமுகப்படுத்திய ‘மெத்தட் ஆக்டிங்’ வகை நடிப்பு முறையை அங்குதான் அவர் மிகச் சிறப்பாக கற்று தேர்ந்தார். ஒருமுறை வகுப்பில் எல்லோரையும்  முட்டை ஈனும் கோழி போல் நடிக்க சொன்னார் ஆசிரியர். எல்லோரும் அப்படியே அமர்ந்து நடித்துக் கொண்டிருந்தனர். திடீரென அருகில் ஒரு வெடிகுண்டு வெடிக்கும் சப்தம் கேட்க. எல்லோரும் பதறி அடித்துக் கொண்டு ஓடினர். ஆனால் மார்லன் மட்டும் அமர்ந்த நிலையில் அசையாமல் உட்கார்ந்திருந்தார். ஆசிரியர் அவரருகே வந்து உனக்கு வெடிசப்தம் பயமாக இல்லையா எனக் கேட்டார். அதற்கு மார்லன் நான் கோழி ஆயிற்றே எனக்கு வெடிகுண்டு பற்றியெல்லாம் தெரியாது எனக்கூற ஆசிரியர் அசந்து போனார். அப்படியாக தனது பாத்திரத்தில் ஒன்றிப் போனவர் பிராண்டோ   
அதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஹாலிவுட் இயக்குனர் பிரெட் சினோமன் திரைப்படத்தில் நடிக்க பிராண்டோவை அணுகியபோது தனது வழிகாட்டியான ஆசிரியர் ஸ்டெல்லா ஆல்டரிடம் ஆலோசனை பெற்ற பின் ஒப்புக் கொண்டார் பிராண்டோ. பிராண்டோவின் முதல் திரைப்படம் தி மென்ஆகும். காயமடைந்த ஒரு போர் வீரனைப் பற்றிய படமென்பதால் சில மாதங்கள் ராணுவ மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் அமர்ந்து பழகி, அங்கிருந்த நோயாளிகளின் மன நிலையைக் கூர்ந்து கவனித்தார். நடிப்புக்காக மட்டுமல்லாமல் வாழ்வில் துன்பப்படும் மனிதர்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வாக அவருக்கு அது அமைந்தது. அவரது முதல் படம் மிகச் சிறந்த விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதான பொருளாதார வெற்றி பெறவில்லை. இருந்தாலும் பிராண்டோவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
அடுத்து பிராண்டோ ஏற்கனவே நடித்து 855 முறை மேடையேறிய எ ஸ்ட்ரீட் கார் நேம்ட் டிசையர்திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. இந்த திரைப் படம் 1951ல் வெளிவந்து கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் டாலர்களைச் சம்பாதித்தது. பல பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட இந்தத் திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், துணை நடிகை, சிறந்த கலை போன்ற பிரிவுகளில் விருதினை வென்றது. தனது இரண்டாவது படத்திலேயே சிறந்த நடிகர் பிரிவில் பிராண்டோ பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அவருக்கு விருது கிடைக்கவில்லை. ஆனாலும் அவரது ஆறாவது படமான ஆன் த வாட்டர் ஃபிரண்ட்அவருக்குச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினைப் பெற்றுத் தந்தது.
மார்லன் நடிக்கும் பல படங்களில் அவரது பாத்திரம் வறிய நிலை மக்களை பிரதிபலிப்பதாக இருந்தது. உதாரணமாக மெக்சிகோவில் நடைபெற்ற ஒரு உழவர் புரட்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில், ஜபாட்டா என்கிற கூலி விவசாயிகளினுடைய தலைவன் பாத்திரத்தை மார்லன் பிராண்டோ ஏற்று நடித்தார். யுவான் ஜபாட்டா (ஜபாட்டா வாழ்க) என்று அந்தப் படத்திற்குப் பெயர்.
1969ம் ஆண்டு மரியோ பூஸோ எழுதிய நாவலான காட்ஃபாதர் வெளியான நாளிலிருந்தே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நாவலின் மீது கண் வைத்த பாரமவுண்ட் சினிமாஸ் கதை உரிமையை வாங்கி வைத்துக் கொண்டு இயக்குநரைத் தேடி வந்தது. அதன் பொறுப்பிலிருந்தவர் ராபர்ட் இவான்ஸ். காட்ஃபாதர் கதைக்களம் இத்தாலிய பின்னணியில், மாஃபியா கும்பலைப் பற்றியதாக இருந்ததால் இத்தாலியர் ஒருவர் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என்று பிரான்சிஸ் கொப்பல்லாவை அணுகினார். இந்த வாய்ப்பை உடனே ஏற்றுக் கொண்ட கொப்பல்லா போட்ட ஒரே நிபந்தனை பிராண்டோ நாயகனாக நடிக்க வேண்டும் என்பது தான்.
ஆனால் ராபர்ட் இவான்ஸ் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. திமிர் பிடித்த ஆள், யாருக்கும் அடங்காதவர் மேலும்  அவரது படங்கள் வரிசையாகத் தோல்வி கண்டன போன்ற காரணங்களைச் சொல்லி பிராண்டோவை புறக்கணித்தார். இதைக் கேள்விப்பட்ட பிராண்டோ தனது ஒப்பனையாளரை வைத்தே கார்லோன்பாத்திரத்துக்கான ஒப்பனையைப்  போட்டுப் படங்களை அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த கொப்பல்லோவும், பூஸோவும் தாங்கள் மனதில் நினைத்திருந்த கதாபாத்திரம் நேரில் வந்ததாகவே உணர்ந்தனர். பிராண்டோ நாயகனாக ஒப்பந்தமானார்.
படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களில் கொப்பல்லாவின் போக்கில் திருப்தியடையாத பாரமவுண்ட் அவரை மாற்ற முடிவு செய்தது. விஷயத்தை அறிந்த பிராண்டோ, “கொப்பல்லோ இல்லையென்றால் நான் இந்தப் படத்தில் தொடரப் போவதில்லைஎன்று பகிரங்கமாக அறிவித்தார். இந்த பிடிவாதமான அறிவிப்புதான் கொப்பல்லோ இப்படத்தில் தொடர்ந்து பணியாற்றக் காரணமாக இருந்தது.  
டைம்பத்திரிக்கை 2000ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வின்படி சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த ஐம்பது படங்களில் காட்ஃபாதர்படமும் இடம் பெற்றது. உலகம் முழுக்க எத்தனையோ தாதா கதைகள் வந்திருக்கலாம். அவற்றுக்கெல்லாம் முன்னோடி காட்ஃபாதர் திரைப்படம். அந்த படத்தில் நடித்தமைக்குத்தான் அவருக்கு ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. அந்த விருதைத்தான் அவர் வாங்காமல் புறக்கணித்து சரித்திரத்தில் இடம் பெற்றார். இப்படி அவர் விருதை புறக்கணிப்பது எதிர்காலத்தில் அவருக்கு மற்ற எந்த விருதுக்கு தேர்வு செய்யவும் ஒரு தடையாக அமையும் என்பதும் மார்லனுக்குத் தெரியும் இருப்பினும் அதை உதாசீனப்படுத்திவிட்டு மன உறுதியுடன் அந்த முடிவை எடுத்தார்.  
பொதுவாகவே இரக்க குணமும், விளிம்பு நிலை மக்கள் மீது ஆழ்ந்த அன்பும் கொண்டிருந்தார் பிராண்டோ. அவர் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நாட்களில் தனது நண்பனுடன் ஒரு அறையில் தங்கியிருந்தார். இருவரும் தங்கள் சட்டைப் பையில் வைக்கும் பணம் அடிக்கடி திருடு போவதை உணர்ந்தனர். பிராண்டோவின் நண்பர் அறையைச் சுத்தம் செய்யும் நபர் தான் பணத்தைத் திருடுகிறார் என்பதை ஒரு நாள் கண்டுபிடித்து அவரைப் போலீசில் மாட்டிவிடலாம் என்று பிராண்டோவிடம் சொன்ன போது, ‘பாவம் அவனுக்கு நம்மை விடத் தேவை அதிகம் போலிருக்கிறது. இல்லையென்றால் அவன் இப்படி செய்பவனில்லைஎன்று சொல்லி அவனுக்காகவே தனது சட்டைப் பையில் பணத்தை வைக்கத் துவங்கினார்.
               படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தபோது தென்னாப்பிரிக்க தூதரகத்திற்கு முன்பு, தென்னாப்பிரிக்க அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி நடந்து கொண்டிருந்த போராட்டத்தைப் பற்றி அறிந்து படப்பிடிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு போராட்டத்தில் தானும் கலந்து கொண்டார். 1963_ஆம் ஆண்டு மாரட்டின் லூதர் கிங் உரை நிகழ்த்திய ஆகஸ்ட் மக்கள் உரிமைப் பேரணியில் பங்கேற்றார். ‘ எனக்கு ஒரு கனவு இருந்தது’ என்று மார்ட்டின் லூதர் கிங் முழங்கியது அப்பொழுதுதான். மார்ட்டின் மறைந்த பொழுது கண்ணீருடன் தனது படபிடிப்புக்களை ரத்து செய்துவிட்டு அவருக்கான அஞ்சலி கூட்டங்களில் பங்கேற்றார். ஜான் எஃப். கென்னடி அதிபராகப் போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவாகப் பல கூட்டங்களில் படப்பிடிப்பைப் புறக்கணித்து விட்டுப் பங்கேற்றார்.
மனிதர் உயிரை மனிதர் பறிக்கும் மரண தண்டனைக்கு எதிராகவே அவரது எண்ணமும் உறுதியும் இருந்தன. சான் குவென்டின்சிறையில் ஒரு கைதியின் மரண தண்டனையை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
               உலகம் முழுக்க தன்னுடைய படங்களுக்காக பயணம் போன பொழுது அவர் எப்படி கிழக்கு நாடுகள் பஞ்சத்தில் தோய்ந்து துன்பப்படுகின்றன என்பதை கண்டார். இந்த நாடுகள் இப்படி வாடுவதற்கு நம்மைப்போன்ற மேற்குலக நாடுகளின் சுரண்டல் தான் காரணம்.என்று கோபமாக  அவர் கொந்தளித்தார்.
      1959 ஆம் ஆண்டிலேயே  ஹென்றி ஃபாண்டா, மர்லின் மன்றோ, ஆர்தர் மில்லர் போன்றவர்களுடன் இணைந்து அணு ஆயுதத்துக்கு எதிரான போராட்டங்களில் பங்கு கொண்டார். தனது படங்களை இனவெறி கொண்ட பார்வையாளர்கள் முன்பு எக்காலத்திலும் காண்பிக்கக் கூடாது என, திரைப்படக் கதாசிரியர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் போன்றவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்துமாறு கோரி முன்னணியில் நின்று செயல்பட்டார்.         
இந்தியாவின் பீகாரில் நிலவிய கொடிய பஞ்சத்தை பற்றி ஆவணப் படமெடுத்து அமெரிக்க மக்களுக்கு போட்டு காண்பித்து அவர்களுக்கு உதவ நிதி திரட்ட முயன்ற பொழுது அதற்கு அமெரிக்காவில் பெருந்தடைகள் எழவே அமெரிக்க மனம் இதர மக்களின் கண்ணீர் பற்றி கவலைப்படுவதே இல்லை!என்று கோபத்தோடு பதிவு செய்தார் அவர்.
                பிராண்டோவின் திரைப்பட வாழ்வில் ஐம்பது ஆண்டு காலத்தில் முப்பத்து ஒன்பது திரைப்படங்களில் மட்டுமே  அவர் நடித்துள்ளார். அவர் இப்படியான அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் தனது தொழிலை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் நூறு படங்களைத் தொட்டிருக்கக் கூடும். இன்னும் பல விருதுகள், கோடிகள் அவரை அடைந்திருக்கும்.
அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை அவரது இறுதி காலம் வரை துன்பங்கள் நிறைந்தவையாகவே இருந்தன. அவரது ஒரு மகன், தனது ஒன்றுவிட்ட சகோதரியின் காதலனை கொன்றதற்காகக் சிறையிலடைக்கப்பட்டான். பிராண்டோவின் மகள் அவளது காதலனைப் பறிகொடுத்தத் துயரினைத் தாங்க இயலாமல்  தற்கொலை செய்துகொண்டாள் என்றாலும்  கடைசிவரை ஒரு போர்க்குணம் உடையவராகவே அவர் இருந்திருக்கிறார். ஈராக் மீது தொடுக்கப்பட்ட யுத்தத்தை எதிர்த்து, கண்டித்து அறிக்கை விட்டதோடு மட்டுமில்லாமல், தனது 78 வது வயதில், இராக் யுத்தத்துக்கு எதிராக  நடுநிலையாளர்கள் ஊர்வலம் போனபோது அவர்களில் ஒருவராக மார்லன் பிராண்டோவும் போயிருக்கிறார்.
தனது கடைசி நாட்களில் அவரது நண்பர் மைக்கேல் ஜாக்சனின் நெவர்மேன்ஸ் லாண்டில்கழித்தார் பிராண்டோ. தாகித் தி எனும் பூர்வகுடி இந்தியப் பிரதேசத்தில் அமைந்த தனித்த வீட்டில் சிலநாட்கள் கழித்தார் 'அம்மா எனக்குச் சொன்ன பாடல்' எனும் தனது சுயசரிதையை 1996_ஆம் ஆண்டு பிராண்டோ எழுதி வெளியிட்டார். அவரது விரிவான வாழ்க்கை வரலாற்றை தமிழில் அஜயன் பாலா எழுதி இருக்கிறார். மார்லன் பிராண்டோ 2௦௦4 ஆம் ஜூலை ஒன்றாம் தேதி மரணமடைந்தார்.

சர்ச்சைகளும், அவதூறுகளும், விமர்சனங்களும், துன்பியல் சம்பவங்களும் நிறைந்த ஒரு சாகசப்படம் போன்ற அவரது வாழ்க்கையில் அவரது போராட்டக்குணம்தான் அவரது அழிக்க முடியாத அடையாளமாக இன்றும் கருதப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...