வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

காலம் மறக்காத கவிக்குயில்


         
        இன்றைய நவீன இலக்கிய உலகில் கவனிக்கத்தக்க அளவு பெண் கவிஞர்கள் பரவலாக இயங்கிக் கொண்டும் சமகால சமூக சிக்கல்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு தங்கள் சிந்தனைகளைப் பதிவு செய்தபடியும் இருக்கிறார்கள்.  தமிழிலக்கிய வரலாற்றில் தேசிய அளவில் மகாகவி பாரதியார், இரவீந்திரநாத் தாகூர், வள்ளத்தோள் எனப் பலர் அறியப்பட்டாலும் பெண் கவிஞர்களில் அதே அளவு கவனிக்கப்பட்டவர் என்று சொன்னால் அது கவிக்குயில் சரோஜினி நாயுடு மட்டுமே.

       அவர் இயங்கிய காலம் இந்திய சுதந்திரப் போராட்ட காலம் என்பதோடு அவர் தன்னை சுதந்திரப் போராட்டக்களத்தில் ஈடுபடுத்திக் கொண்டார் என்பதுமொரு காரணம். இந்திய ஆங்கில இலக்கியத்தில் அவருக்கென்று ஒரு இடமுண்டு.

       சரோஜினிக்கு பாரம்பர்யமான கல்விப் பின்னணி உண்டு. அவரது தந்தை அகோரநாத் சட்டோபாத்யாயா, அன்றைய ஒருங்கிணைந்த வங்காளத்தில் பள்ளிக்கல்வியை முடித்து, ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். அதோடு அறிவியல் துறையில் நாட்டம் காரணமாக இங்கிலாந்து சென்று, அறிவியல் பட்டப்படிப்பும் பின் அதில் ஆய்வும் முடித்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

          இந்தியா திரும்பியதும், அவருக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைத்தது. அகோரநாத், பாரத சுந்தரி தேவி தம்பதியருக்கு ஏழு குழந்தைகள். அதில் மூன்று பேர் ஆண்கள். நான்கு பேர் பெண்கள். பணி நிமித்தம் ஹைதராபாத்துக்கு குடி பெயர்ந்தனர். அப்பொழுது இந்திய சுதந்திரத்திற்கான தீவிரப் போராட்டங்கள் நிகழ்ந்த காலம். போராட்டத் தீ அவருள்ளும் பற்றிக் கொழுந்து விட்டெரிந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் துவக்கப்பட்டு கிளை விரித்துப் படரத் துவங்கிய நேரமும் கூட. 

        இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் ஹைதராபாத் கிளையின் முதல் உறுப்பினர் என்ற பெருமை அகோரநாத்துக்கு உண்டு. இயக்கத்தின் மீதான அவரது ஈடுபாடு அவரது வேலையைப் பறித்தது.

        வேலையை இழந்தாலும், அவரது சுதந்திர தாகம் குறையவில்லை. அதோடு இந்திய மக்களின் கல்வியறிவை பெருக்க வேண்டும் என்ற தணியாத தாகமும் அவருக்கிருந்தது. ஹைதராபாத்தில் கலாசாலை ஒன்றை ஏற்படுத்தி, தானும் ஒரு ஆசிரியராகப் பணியாற்றத் துவங்கினார். இன்றைய நிஜாம் கல்லூரியாக அது பரிணமிக்கிறது. தன்னுடைய குழந்தைகளும் அத்தகைய அறிவுத் தேடலுடன் இருக்க வேண்டுமென்ற காரணத்தால், அவர்களுக்கு வேண்டிய, விரும்பிய கல்விச் செல்வத்தை அவர் அளித்தார். இத்தகைய அற்புதமான பின்னணியில் வளர்ந்த சரோஜினிக்கு இயல்பிலேயே படிப்பதில் நாட்டமும் சுதந்திர வேட்கையும் இணையாக வளர்ந்தன.

        சரோஜினியின் சகோதரர் வீரேந்திரநாத் சட்டோபாத்யாய ஒரு இடதுசாரி சிந்தனையாளர். அவரது பார்வையில், இந்திய சுதந்திரமென்பது சர்வதேச அரங்கில் கொண்டு செல்லப்படும் போது தான் ஈடேறும் என்கிற பரந்த நோக்கிலிருந்தது. பின்னாளில் அவர் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

       சரோஜினியின் மற்றொரு சகோதரர் ஹரீந்தரநாத்தும் ஒரு புகழ்பெற்ற கவிஞர், நாடகாசிரியர்.

       சரோஜினி மெட்ரிக் கல்வியில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். அவரது கல்வித்திறன் நிஜாம் மன்னரை அவர் மீது கவனத்தைத் திருப்பச் செய்தது. சரோஜினியை தன் சொந்த செலவில் மேற்படிப்புக்கு இங்கிலாந்து அனுப்பினார் நிஜாம் மன்னர். கணிதமும் அறிவியலும் பிரதான பாடங்கள் ஆயின. அங்குதான் சரோஜினிக்குப் பிரச்சினைகள் துவங்கியது. எப்படி நம் மகாகவி பாரதிக்கு கணக்கு பிணக்கானதோ அதே போல் சரோஜினிக்கு கணிதம் வேம்பானது. ஒவ்வொரு கணக்குக்கும் விடைகாணும் முயற்சியில் ஈடுபடும் போதெல்லாம் அவை புதிய புதிய சொற்களாக முளைத்து கவிதைகளாயின. எழுத்துக்களைப் பிரித்தால் புள்ளிகளும் கோடுகளும் தானே எஞ்சும். அதுபோலவே கோடுகளும், புள்ளிகளும் எழுத்துக்களாகப் பரிணமித்தன அவருக்கு.                                 
       இங்கிலாந்தின் தட்பவெப்பமும் சூழலும் அவரை மென்மேலும் கவிபுனையச் செய்தன. அவர் தன்னைக் கவிஞர் என்று வெளிப்படுத்தா விட்டாலும், அவருடன் பயின்ற சக மாணவர்கள் அவரது கவிதைகளை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தினர். பொதுவாக ஆங்கிலேயர்களுக்கு இந்தியர்களின் ஆங்கில அறிவின் மீது எப்பொழுதும் இளக்காரமான பார்வையுண்டு. ஆனால், ஆங்கில இலக்கியத்தின் அன்றைய ஜாம்பவான்கள் கூட வியக்கும் வண்ணம் சரோஜினியின் ஆங்கில மொழியறிவு அவரது கவிதைகளில் வெளிப்பட்டது.
கவி புனையும் திறனுக்கு நிகராக அவரது பேச்சாற்றலும் பிறரைக் கவரும் விதத்தில் பிரகாசித்தது. இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலை அவரது உடல் நலனுக்கு உகந்ததாக இல்லை. உடற்பிணிகளால் தொடர்ந்து படிக்க இயலாத நிலை அவருக்கு ஏற்பட்டது. வேறு வழியின்றி அவர் இந்தியா திரும்பும் முடிவுக்கு வந்தார்.

       அகோரநாத் தனது மகள் பாதியிலேயே படிப்பை நிறுத்த வேண்டிய சூழலால் கவலையுறவில்லை. பதிலாக அவர் தன்னெழுச்சியுடன் கவிதை புனையும் ஆற்றல் பெற்றது கண்டு பெருமிதம் அடைந்தார். சரோஜினியின் தாயாருக்கு இளம்பிராயத்தில் கவிதை எழுதும் ஆற்றல் இருந்தது. அது சரோஜினியை தொற்றிக் கொண்டதில் பூரிப்பு அவருக்கு.

        ஊர் வந்து சேர்ந்ததும், அவரது உடல் நிலை சீரானது. ஹைதராபாத்தில் மக்கள் நம்பிக்கையையும், அன்பையும் பெற்ற மருத்துவர் கோவிந்தராஜு நாயுடுவின் நட்பு சரோஜினிக்கு கிடைத்தது. அந்த நட்பே பின் காதலாய் உருவெடுத்தது. இதுபற்றி அறிந்த அகோரநாத் எந்த மறுப்பும் தெரிவிக்காமல், அவர்களது திருமணத்துக்குச் சம்மதித்தார். அந்த நேரத்தில் ஜாதி, மதமெல்லாம் கடந்த புரட்சிகரத் திருமணம் அது. கோவிந்தராஜ் நாயுடு பிரம்ம சமாஜத்தைத் தழுவியவரென்பதால், இரு குடும்பத்தின் பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள் வேறாக இருப்பினும் அவையேதும் அவர்களுக்குத் தடையாக இருக்கவில்லை.

        திருமணமான சில நாட்களில் அவரது கவிதைகளின் போக்கு வேறு கட்டத்தை நோக்கி நகர்ந்தது. அழகுணர்ச்சியையே பெரிதும் சார்ந்திருந்த அவரது கவிதைகள், சமூக ஏற்றத் தாழ்வு குறித்து அக்கறையோடு வெளிப்பட்டன. இந்திய சுதந்திரப் போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம், அவரது கவிதைகளில் விடுதலையுணர்வுடனான வார்த்தைகள் அனலாய் கனன்றன.

  காந்திஜி அறிவித்த அறப்போராட்டங்களில் அவர் ஈடுபடத் துவங்கினார். அவரது பேச்சாற்றல் இன்னும் பலரை இந்திய தேசிய காங்கிரஸை நோக்கி ஈர்த்தது. அதே நேரம் பிரிட்டிஷ் அரசின் எதிர்ப்புகளையும் சந்தித்தது. பஞ்சாபில் ஜெனரல் பவர் நடத்திய படுகொலை பற்றி பல்வேறு தலைவர்கள் தீரத்துடன் முழங்கியிருக்கின்றனர். சரோஜினி தனது பேச்சில் படுகொலை சமயத்தில் பெண்கள் மீது நிகழ்ந்த பாலியல் பலாத்காரங்கள், அத்துமீறல்கள் குறித்து காட்டமாக சாடினார். 
  
         எல்லோராலும் கண்ணியமானவர் என்று கருதப்பட்ட மாண்டேகு (மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தக் குழுவில் இடம்பெற்றவர்) கூட, ‘சரோஜினியின் பேச்சில் வன்மையில்லை, அவர் அவதூறு பேசுகிறார்' என்று பொய்யாக மறுத்துப் பேசினார்.

        சரோஜினி தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும் என்றும் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் எச்சரிக்கப் பட்டார். ஆனால், சரோஜினி தனது குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபித்தபிறகு பிரிட்டிஷ் அரசு வாய்மூடிக்கொண்டது. பஞ்சாப் படுகொலை பற்றியும், அங்கு நிகழ்ந்த மரணங்கள் பற்றியும் மட்டுமே பேசினாரே தவிர, பிற குற்றங்கள் பற்றி அதிகம் பேசவில்லை.

         சரோஜினி பெண்களுக்கு எதிராக நடந்த அநீதிகளைப் பற்றி அழுத்தம் திருத்தமாகப் பேசியவர். அவரது பேச்சாற்றலும், துணிச்சலும் மகாத்மா காந்தியின் கவனத்தை ஈர்த்தன.
காந்திஜி எப்போதும் தான் தீர்மானித்த வேலைகளுக்கு மிகச் சரியான நபர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லவர். ஒருசமயம், தென்னாப்பிரிக்க இந்தியர்கள் இனபேதம் காரணமாக தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து அன்றிருந்த ஆங்கிலேய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும், பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் காந்திஜியை அழைத்தனர். காந்திஜிக்கு இந்தியாவிலிருந்த வேலைப்பளூ காரணமாக தனது சார்பில் தென்னாப்பிரிக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க சரோஜினியைத் தேர்ந்தெடுத்தார். சரோஜினி தனது பேச்சாற்றலால் அப்போதிருந்த தென்னாப்பிரிக்க பிரதமர் ஸ்மட்ஸை மடக்கினார்.

         ஆங்கிலேயர்கள் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்களை அவர்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்களாக இருந்தாலும், கூலிகள் என்றே ஏளனமாக குறிப்பிட்டு வந்தனர். சரோஜினி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஸ்மட்ஸ், இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவில் கூலிகளாகத்தான் பிழைப்பு நடத்துகின்றனர் எனும் பொருள்படும்படி கேலியாகப் பேசினார். அதற்குப் பதிலளித்த 

         சரோஜினி இங்கிலாந்தை அதன் கட்சி தொழிற்கட்சி, அந்த ஆட்சியில் ஆணைக்கு ஏற்ப சம்பளம் பெற்றுக் கொண்டு தென்னாப்பிரிக்காவில் வாழும் வெள்ளையர்களும் ஒருவகையில் கூலிகளே என்று பேசினார். ஸ்மட்ஸ் மூக்குடைபட்ட அந்த சம்பவம் சரோஜினிக்குப் பெரும்புகழைத் தேடித் தந்தது.

        அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேசக் கூட்டமொன்றுக்கு காந்தி அழைக்கப்பட்ட போதும், காந்தி தன் தூதராக சரோஜினியையே அனுப்பினார்.
1925-ல் கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாகாணக் கூட்ட சபைக் கூட்டத்தில் இந்திய தேசியக் காங்கிரசின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் இந்தியப் பெண்மணி அவர்தான்.

        காந்தி அறிவித்த ‘வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் மேற்கொண்டார் சரோஜினி. சிறைச்சாலையில் அவர் இருந்த நாட்களில் சிறைச்சாலைத் தோட்டத்தை ஒரு நந்தவனம் போலாக்கிய பெருமை அவருக்குண்டு.

        இந்திய அளவில் மிக அதிக சுற்றுப்பயணங்கள் செய்து அரசியல் பணியாற்றியவர் சரோஜினி. இந்திய சுதந்திரத்துக்குப் பின் உத்திரப்பிரதேச மாநில கவர்னராக நியமிக்கப் பட்டர். இந்தியாவின் முதல் பெண் கவர்னர் அவர்தான்.
         
       மிக நீண்ட பயணங்கள் , ஓய்வற்ற அலைச்சல் காரணமாக அவரது உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாகசீர்குலைந்தது. 1949-ம் வருடம் மார்ச் மாதம் 2-ம் தேதி தனது அலுவலகத்தில் பணி செய்யும் நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. 
     


 "யாரும் எதுவும் பேச வேண்டாம் . ஏதாவது ஒரு பாடலைப் பாடு" என்று பணிப்பெண்ணிடம் கூறியதுதான் அவரது  கடைசி வார்த்தைகள்.
     


        விடுதலைக்காக ஏங்கிய அந்தக் குயில், விடைபெற்றுப் பிரியும்போதும் விரும்பியது ஒரு பாடலைத்தான். எனில், 
அவரைத் தவிர வேறு 
எவருக்கு கவிக்குயில்
என்ற பெயர் பொருந்தும்?!


நன்றி: 'திருப்புமுனை' -ஆகஸ்ட்-2013


2 கருத்துகள்:

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...