செவ்வாய், 15 மே, 2012

ஈரானிய சினிமாவின் புதிய எழுச்சி

          2011- ம் ஆண்டில் வெளிவந்த உலகத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுவிட்டது. எதிர்பார்த்தது போலவே ‘தி ஆர்ட்டிஸ்ட்' திரைப்படமும் ‘ஹ்யூகோ' திரைப்படமும் தலா ஐந்து விருதுகளை பங்கிட்டுக் கொண்டன. பிரபல ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப் மூன்றாம் முறையாக ஆஸ்கர் விருதைப் பெற்றுக் கொண்டார்.
          மெளன மொழிப்படமாக எடுக்கப்பட்டிருந்த ‘தி ஆர்ட்டிஸ்ட்' திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதற்குக் காரணம் படத்தின் கரு, களம், பண்பட்ட நடிப்பு, எடுக்கப்பட்ட விதம் என்று பல காரணங்கள் இருந்தாலும் சலனப்படங்கள் வெளியான கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள் ‘ஆர்ட்டிஸ்ட்', மெளனப் படங்களுக்கான அஞ்சலி என்றுதான் கருதுகிறார்கள்.
        மார்ட்டின் ஸ்கார்ஸஸியின் ‘ஹ்யூகோ' படமும் விமர்சகர்களால் கணிக்கப்பட்ட படம்தான். ஆனால் ஆஸ்கர் படவிழாவில் மட்டுமல்ல; பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களிலும் மிக அதிகமான அளவில் பார்வையாளர்களை கவர்ந்த படம் என்றால் அது ஈரானின் ‘SEPERATION'  -ஐ தான் குறிப்பிட வேண்டும்.
        பொதுவாக ஈரானியத் திரைப்பட இயக்குநர்கள் தங்கள் திரைப்படங்களுக்கான கருவை மிக எளிதாக கட்டமைத்துக் கொள்வார்கள். சிக்கலான திருப்பங்களோ, பரபரப்பான காட்சிகளோ இருக்காது. அன்றாடம் வாசிக்கும் செய்தித்தாளின் ஒரு வரிச் செய்தியிலும் அவர்களால் மெலிதான ஒரு திரைக்கதையைத் தந்துவிட முடியும்.
        CLOSE-UP என்றொரு திரைப்படம். ஈரானின் பிரபல இயக்குநர் மக்மல் பஃப் வாழ்வில் நடந்த ஒரு சிறு சம்பவத்தின் அடிப்படையில் உருவானது.
         மக்மல் பஃப்-ஐ பார்த்தே இராத ஒரு குடும்பத்திடம் நான் தான் மக்மல் பஃப் என்று ஏமாற்றுகிறான் ஒருவன். பணத்துக்காகவும், சில சலுகைகளுக்காகவும் அவன் அப்படி பொய் சொல்கிறான். ஆனால் சில நாட்களிலேயே அவன் மக்மல் பஃப் இல்லையென்று கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறான். இது செய்தியாக ஈரானியப் பத்திரிகைகளில் வெளிவந்தது.
        இதனை ஈரானின் மற்றொரு பிரபல இயக்குநர் கியாஸ்தர்வஸ்கி வாசிக்கிறார். அவ்வளவுதான். கேமரா, பட யூனிட் சகிதம் கைதான நபர் அடைபட்டிருக்கும் சிறைச்சாலைக்கு செல்கிறார். அந்த வழக்கின் விசாரணையையும், பிடிபட்டவனின் அதற்குப் பிறகான நடவடிக்கைகளையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பிந்தைய நிலைமையையும் அப்படியே நேரிடையாகப் படம் பிடிக்கிறார். (சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியுடன்) விசாரணைக்கு முந்தைய சம்பவங்களை சுருக்கமான திரைக்கதையினால் படமாக்குகிறார்.
       ஈரானில் சட்டப்படி குற்றம் சுமத்தியவர்களே பிற்பாடு குற்றவாளியை மன்னிப்பதாக முடிவெடுத்தால் தண்டனை ரத்து செய்யப்படும். அந்த அடிப்படையில் குற்றவாளி விடுதலையாகிறான். விடுதலையான பின் தான் ஏமாற்றிய விதத்தை இயக்குநர் கியாஸ்தர்வஸ்கியிடம் விவரிக்கிறான். அவனையே முன்பாதி கதையிலும் நடிக்க வைக்கிறார். அதோடு இல்லாமல் குற்றவாளியை நிஜ மக்மல் பஃப்-இடம்  அழைத்துச் சென்று அறிமுகப் படுத்துகிறார். இதுவும் படத்தில் ஒரு காட்சியாகிறது.
         உலகத் திரைப்பட வரலாற்றில் நானறிந்த வரையில் ஒரு திரைப்படத்தின் பாதி பகுதி வழமையான முறையில் காட்சிகளாகப் பிரிக்கப்பட்டு படமாக்கப்பட்டு, மீதமுள்ள பகுதி நேரிடையான சம்பவங்களை படமாக்கிய உத்தி, ‘குளோசப்' படத்தில்தான் இடம் பெற்றதாகக் கருதுகிறேன். விசாரணை நடக்கும் நீதிமன்றக் காட்சியைக் கூட நேரடியாகவே படம்பிடித்துள்ளனர்.
       படத்தின் இயக்குநர் க்யாஸ்தர்வஸ்கி ஒரு புதுமை விரும்பி. இப்படியான புதுமைகளை எப்படிக் கண்டடைகிறீர்கள் என்று ஒரு நண்பர் அவரைக் கேட்டதற்கு, ‘தேவையும் சூழலும்தான் மனிதனை புதுமையை நோக்கித் துரத்துகிறது' என்று பதிலளித்தாராம்.
         உண்மைதான், ஈரானிய திரைப்படத் தணிக்கைக் குழு மிகக் கடுமையான விதிகளைப் பின்பற்றி இயங்குகிறது. ஆண் பெண் தொடுதலோ, பெண்களின் உடலுறுப்புகளை ஆபாசமாக வெளிப்படுத்துதலோ, அரசியலை- நிர்வாகத்தை நேரடியாக விமர்சித்தலோ எந்தக் காட்சியிலும் இடம் பெறக் கூடாது என்பது முக்கியமான விதி. ஈரானின் தேசியம், மதம் மற்றும் பண்பாடுகளையும் இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் வசனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதில் யாருக்கும் விதிவிலக்கும் இல்லை.
        கிட்டதட்ட சர்க்கஸில் ஒரு நபரை நிற்கவைத்து அவரைச் சுற்றிலும் கத்திகள் வீசப்படுவது போல, ஈரானில் தணிக்கை விதிகள் படைப்பாளிகளைச் சுற்றி வீசப்படுகின்றன.
        ஈரானின் இயக்குநர்கள் தங்களின் கருத்துக்களை, விமர்சனங்களை விதிகளின் சூறைக்காற்றில் சிதைவுறாமல் மிதக்கும் இலைகளைப்போல் மிக நுட்பமாக திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். அவை உலகம் முழுக்க திரைப்பட ரசிகர்களிடையே பலத்த அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.
        உலகின் மிகச் சிறந்த பத்துத் திரைப்படங்களை பட்டியலிடும்படி எந்த விமர்சகரிடம் கேட்டாலும் அதில் நிச்சயமொரு ஈரானியத் திரைப்படமிருக்கும்.  குறிப்பாக Children of Heaven, Colour of Paradise, Cyclist, Apple, White Balloon, Baran ஆகிய திரைப்படங்களுக்கு உலகம் முழுக்க மொழிகள் கடந்த ரசிகர்கள் இருக்கிறார்கள்.
         ஆனால், இத்தனை சிறப்பான படங்களிருந்தும், ஈரானியப் படங்கள் 2011 வரை ஆஸ்கார் விருதினை வென்றதில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் இவ்வாண்டு ‘Seperation' திரைப்படம் ஆஸ்காரில் பிறமொழிப் படங்கள் வரிசையில் சிறந்த திரைப்படமாக தேர்வாகியுள்ளது.
         ஆஸ்கார் என்பது முடிவான அங்கீகாரம் என்று சொல்லிவிட முடியாது. ஆஸ்கார் விருது இன்னும் அதிகமான கவனத்தை ஈர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
        ‘Seperation' திரைப்படத்தின் கதை ஒரு பயணச்சீட்டின் பின்புறம் எழுதிவிடக் கூடிய அளவு மிகச் சுருக்கமானதுதான். எல்லா மனிதருக்குள்ளும் ஒரு குற்றவாளியும் ஒரு நீதிபதியும் மறைந்தே இருக்கிறார்கள் என்பது  படத்தின் ஒரு வரி நீதி.
         விவாகரத்து கோரி மனு செய்திருக்கும் நடேர் மற்றும் சிமின் ஆகியோரின் ஒரே பெண் டெர்மே. இருவரின் பிரிதலுக்குப் பிறகு யாருடன் மகள் இருக்க வேண்டும் என்பதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு. வழக்கு நீதிமன்றத்திலிருக்கும் போது சிமின், பிரிந்து சென்று விடுகிறார். தனது வயதான நோயுற்ற தந்தையை கவனிப்பதற்காக ரசையா என்ற கர்பிணிப் பெண்ணை பணிக்கமர்த்துகிறார் நடேர். அவர் அலுவலகம் சென்றிருக்கும் தருணத்தில் நடேரின் நோயுற்ற தந்தை கட்டிலை விட்டு இறங்கிவிடாமலிருக்க அவரது கைகளை கட்டிலோடு வைத்து பிணைத்து விட்டு, தனக்காக மருத்துவரைப் பார்க்க சென்றுவிடுகிறார் ரசையா. பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் டெர்மே தாத்தா கட்டிலிலிருந்து கீழே விழுந்து பேச்சு மூச்சற்று கிடப்பதைப் பார்த்து அலறுகிறாள். நடேர் தனது தந்தையின் நிலையைப்பார்த்து மிகுந்த கோபமடைகிறார். வீட்டுக்கு திரும்பிய ரசையாவிடம் சண்டை போடும்போது ரசையா மாடிப்படியில் தவறி விழுகிறார்.
        அடுத்த மருத்துவப் பரிசோதனையில் ரசையாவின் கர்ப்பம் கலைந்துவிடுவது தெரிகிறது. நடேர் தள்ளி விட்டதால் தான் இப்படியானதாக ரசையா புலம்ப, அவளது கணவன் நடேர் மேல் வழக்கு தொடுக்கிறார். குற்றம் நிரூபிக்கப் பட்டால் நடேருக்கு மூன்றாண்டு சிறைதண்டனை நிச்சயம் என்ற நிலையில் ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் இரண்டு குடும்பத்தினரும் ஒரு உடன்பாட்டுக்கு முயற்சிக்கிறார்கள்.
        இறுதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு வழக்கைத் திரும்பப் பெற ஒப்புக் கொள்கிறார் ரசையாவின் கணவன் ஹுஜட். நடேரின் மனைவி சிமின் தான் இந்த ஏற்பாட்டினை செய்கிறார். ஆனால் நடேருக்கு ஒரு தீர்மானமான நம்பிக்கை இருந்தது. நிச்சயம் ரசையாவின் இந்த நிலைக்குத் தான் காரணமில்லை என்று. எனவே ரசையாவிடம் தொகைக்கான காசோலையைத் தரும்போது, ரெசையாவை  குரான் மீது ஆணையிட்டு ‘நடேர்தான் குற்றவாளி' என்று கூறிவிட்டு பெற்றுக்கொள்ளுமாறு கூறுகிறார். ரெசையாவின் உள்மனம் உறுத்துகிறது. ஏனெனில் இந்த நிகழ்ச்சி நடக்கும் சில நாட்களுக்கு முன்புதான் கார் மோதிய சம்பவம் ஒன்று நடந்து, அதன் பிறகான மருத்துவப் பரிசோதனையில் கர்ப்பம் கலைந்ததை அறிந்ததால்தான்.

        குடும்பக் கடன், கணவரின் வற்புறுத்தல் காரணமாக நடேர் மீது வழக்கு தொடுக்க சம்மதித்திருந்தாள். ஆனால், பணத்தை பெறும் சமயம், அது பாவத்தின் பணம்; அதன் காரணமாக தன் குழந்தையின் எதிர்காலம் சூன்யமாகி விடும் என்று சத்தியம் செய்ய மறுக்கிறாள்.
         நடேர், சிமின் விவாகரத்து நீதிமன்றத்தில் சட்டப்படி உறுதி செய்யப் படுகிறது. இறுதிக் காட்சியில் மகள் டெரிமேவிடம் நீதிபதி, “நீ யாருடன் செல்கிறாய்?” என்று கேட்கிறார். அவள் தன் பெற்றோரை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு நீதிபதியிடம் தனியே தன் விருப்பத்தைக் கூற விழைகிறாள். நடேர், சிமின் வெளியே காத்திருக்க, படம் நிறைவடைகிறது.
        ஈரானின் திரைப்படங்கள் வழக்கமாக ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு போன்ற தொழில்நுட்பங்களில் பெரிதாக கவனம் செலுத்தப்படாதவையாக இருக்கும். ஆனால், Seperation  திரைப்படத்தில் அற்புதமான ஒளிப்பதிவு, நேர்த்தியான படத்தொகுப்பு, அருமையான இசை, மிகப் பொருத்தமான இயல்பான நடிப்பு என்று எல்லாத் துறைகளிலும் உலகத் தரத்துக்கு சவால் விடுபவையாக இருக்குமாறு இயக்குநர் அஸ்கர்ஃபர்ஹாதி கவனமாக அணிசேர்த்திருக்கிறார். தொழில்நுட்ப பங்களிப்புகளும் ஒரு திரைப்படத்திற்கு கூடுதல் கவனத்தை ஈர்க்க அத்தியாவசியம் என்பதை ஈரானியின் திரையுலகிற்கு  அஸ்கர் நிரூபித்திருக்கிறார்.
       அஸ்கரின் இந்த புதிய எழுச்சி ஈரான் திரைப்படத்துறைக்கு புத்துணர்வைத் தந்திருக்கும். அதற்கான சான்றே ஆஸ்கார் விருது!

நன்றி: 'காக்கை சிறகினிலே ' மே - 2012

வெள்ளி, 4 மே, 2012

புதிய கடலில் எனது அலை

                                               
                                                              
                                                     மன்னார் வளைகுடா 

                                    கதை திரைக்கதை இயக்கம் : த. தனசேகரன் 

                                              வசனம் : நெய்வேலி பாரதிக்குமார்         

        எல்லா விமர்சகர்களையும் நோக்கி எறியப்படும் எதிர் விமர்சனம் ஒன்றுண்டு. “ சொல்லாதே: செய்து பார்என்பதே அது. ஆனால் அந்தக் கோபம்  சரியானதல்ல என்பதும் உண்மை.  இன்னொரு சொல் வழக்கும் உண்டு செய்யத்தெரிந்தவன் வித்தகன் ஆகிறான். செய்யத்தெரியாதவன் விமர்சகன் ஆகிறான் என்பது. இந்த எள்ளலை ரசிக்கலாம்.ஆனால் கற்றறியாமல் ஒன்றை நேர்த்தியாக, நேர்மையாக விமர்சிக்க முடியாது.

                படைப்பாளியாகவும், விமர்சகனாகவும் இருக்கின்ற சிலர் இரண்டு பக்கமும் உள்ள நியாயங்களை எளிதாக புரிந்து கொள்ள இயலும்.

                உலகத் திரைப்படங்கள் குறித்து பல்வேறு கட்டுரைகளை, வெவ்வேறு இதழ்களில் நான் எழுதி வந்திருக்கிறேன். ஆனால் அவற்றின் நோக்கம் தமிழ் மற்றும் பிற மொழி இந்திய திரைப்படங்களை கீழானவை என்று அறிவிக்கும் வெற்று கூச்சல் மூலம் விளம்பரம் தேடுவதல்ல...

                நான் எல்லோரையும் போல நல்ல திரைப்படங்களின் ரசிகன். என் ரசனைக்கு சிறந்ததெனப்படும் திரைப்படங்களை அறிமுகப்படுத்துகிறேன் நல்ல புத்தகம் வாசிக்க கிடைத்தால் நண்பனுக்கு மகிழ்வுடன் அளிப்பது போல.. அப்படியான திரைப்படங்கள் வெளிவரும் சூழல், அந்தந்த தேசங்களின் அரசியல் நிலவரங்கள், பொருளாதார சாத்தியக்கூறுகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டே என் விமர்சனக் கட்டுரைகளை படைக்கிறேன். எல்லா தேசங்களிலும் மிக தரமான திரைப்படங்கள் சிலவும், மோசமான திரைப்படங்கள் பலவும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றிலிருந்து நாமும் நமக்கான நல்லத் திரைப்படங்களை உருவாக்குவோம் என்ற நம்பிக்கையை விதைக்கவே முயற்சிக்கிறேன்.
           நான் முதலில் ஒரு சிறுகதை படைப்பாளி, கவிதைகள் மற்றும் பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். அதற்குப்பிறகுதான் விமர்சகன். எனவே இரண்டு தளங்களிலும் இயங்குவது சரி நிகர் மகிழ்வை தரக்கூடிய விஷயம்.. ஏனெனில் ஓன்றை தாக்குவதற்கு மற்றொன்றை ஆயுதமாக பயன்படுத்துவதில்லை.  தர்க்க ரீதியாக சிலரோடு வாதிட்டிருக்கிறேன் அதனையும் சில வருடங்களாக தவிர்த்து வருகிறேன். வாதங்கள் ஒரு போதும் எதிராளியின் நியாயங்களை கணக்கில் கொள்வதே இல்லை... தன் கையிலிருக்கும் ஆயுதத்தை மட்டுமே தீட்டிக்கொண்டிருக்கும் சாணைக்கல் போலத்தான் அவரவர் வாதங்கள்.. எனவே என் விமர்சனங்கள் பெரும்பாலும் ரசனை சார்ந்தவையே..

                இந்த சூழலில் என் படைப்புகளின் களங்களை பல சமயம் வேறு எவரேனும் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதனை விலங்காக கருதாமல் புதிய சிறகுகளாக கருதி அவற்றில் என்னை பொருத்தி பறக்க எத்தனிக்கிறேன். அவை என்னை வெவ்வேறு உலகங்களுக்கு இட்டுச் சென்றுஇருக்கின்றன. அந்த புதிய அனுபவங்களுக்காகவும், நட்புக்காகவும் என் நியாயமான உழைப்பை தந்திருக்கிறேன்.

                அந்த வகையில் எனக்கு கிடைத்த புதிய சிறகுமன்னார் வளைகுடாதிரைப்படத்தின் வசனம் எழுதும் பணி.. இயக்குனர் . தனசேகரன் தமிழின் ஜனரஞ்சகமான இயக்குனர் மாதேஷிடம் உதவி இயக்குனராக பல காலம் பணியாற்றியவர். வாழ்வின் அடிமட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறவர். கடுமையான உழைப்பாளி. தன்னம்பிக்கைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றால் தாராளமாக தனசேகரனை சொல்லலாம்.

                என்னை என்னுடைய படைப்புகள் வழியாக மட்டுமே அறிந்தவர். என் எழுத்தின் மீது அபாரமான நம்பிக்கையுடையவர்.  அவர் ஏற்கனவேரதம்என்றொரு தலைப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று, அதில்  நான்தான் வசனம் எழுதவேண்டும் என்ற மிகப்பெரிய ஆவலில் என்னுடைய இல்லத்திலேயே அதற்கான திரைக்கதை வடிவம் உருவானது. அதற்கான வசனங்களை முழுமையாக எழுதி அவரிடம் ஒப்படைத்தேன். ஆனால்  தயாரிப்பாளரின் ஒத்துழையாமையால் அந்த படம் துவக்க நிலையிலேயே நின்றுபோனது.

                அதற்கு சில வருடங்களுக்குப்பிறகு என்னை தொடர்பு கொண்ட தனசேகரன் மன்னார் வளைகுடா என்ற தனது புதிய திரைப்படத்தின் சுருக்கமான திரைக்கதையை உணர்ச்சிகரமாக சொல்லி அதற்கான வசனம் எழுதும் பணியை என்னிடம் ஒப்படைத்தார்.. தனசேகரனிடம் எனக்கு பிடித்தமான இரண்டு பண்புகளை நான் குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று அவரதுஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்' மற்றொன்றுதான் ஏற்றுக்கொண்ட விஷயத்தை இன்னார்தான் எனக்கு சொன்னார்' என்று பறை சாற்றும் பண்பு.

              முதன்முதலில் அவர் தனது ரதம் படத்தின் சுருக்கமான திரைக்கதையை எழுதி என்னிடம் காண்பித்தபோது அதிலுள்ள 23 காட்சிகளை தயவு தாட்சண்யமில்லாமல் நான் மாற்றி புதிய வடிவத்தில் அதை உருவாக்கி தந்தேன் அதனை அப்படியே ஏற்றுக்கொண்ட அவர் பார்ப்போரிடமெல்லாம், என்னுடைய திரைக்கதை மற்றும் வசனங்களை சிலாகித்து சொல்வார். அந்த படம் கைவிடப்பட்டதில் இருவரும் சோர்ந்தோம்.. என்றாலும் இருவரும் தளரவில்லை.. மன்னார் வளைகுடாவை முடிந்தவரை மெருகேற்றியிருக்கிறோம்.. மன்னார் வளைகுடாவில் பணியாற்றும்போதும் அவர் என்னுடைய ஆலோசனைகளை மதித்தார். நான் குறிப்பிட்ட ஒன்றிரண்டு கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் புதிதாக அப்படத்தில் சேர்த்ததற்கு தனசேகரனின்நல்லதை ஏற்கும் பண்பே' காரணம். படைப்பை நேசிக்கிறவர்களால் மட்டுமே அது சாத்தியம்..

         மன்னார் வளைகுடாவின் மையக்கரு இரு வேறு திசைகளில் பயணிக்கிறது. ஒன்று விளைநிலங்களை மனைகளாக்கும் தற்கால போக்கினை எதிர்த்து தன் குரலை பதிவு செய்கிறது. அனேகமாக தமிழ்த் திரையுலகில் இது முதல் குரலாக இருக்கலாம்.  மற்றொன்று இழந்த நம் கலாச்சாரங்களை, நம் மாண்பை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை ஒரு அயல்நாட்டு கதாபாத்திரம் மூலம் முயற்சித்திருக்கிறோம். அதாவது நம்முடைய பழக்க வழக்கங்களை நமக்கே கற்றுத்தருகிற ஒரு நபராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜெஸி நடித்திருக்கிறார். காந்தி திரைப்படம் வந்தபோது விளையாட்டாக ஒருவர் சொன்னார்காந்தியை சுட்டு நாம படமாக்கிட்டோம் ( போட்டோ ), வெள்ளைக்காரன்தான் காந்தியை ஷூட் பண்ணி படமாக்கினான் (சினிமா).” அதுதானே இப்பவும் நடக்கிறது.

         தமிழ் திரையுலகில் நிலவும்  வணிக நெருக்கடிகளை கணக்கில் கொண்டே படம் உருவாகியிருக்கின்றது. எனவே இந்த படம் தலைகீழாக புரட்டும் படமில்லை என்றாலும் இத்தனை நெருக்கடிகளுக்கு இடையில் இயன்றவரை நல்ல விஷயங்களை அடிப்படையாக கொண்ட படம்.

         கஞ்சா கருப்பு இதில் விளைநிலத்தை பணத்துக்காக மனைகளாக்க மாட்டேன் என்ற பிடிவாதமான விவசாயியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது திரையுலக வாழ்வில் இது முக்கியமான திரைப்படமாக அமையும். 

                சந்திரா என்ற புதுமுக நடிகை பெற்றோரால் சிறுவயதிலேயே அயல் நாட்டு தம்பதிக்கு தத்துகொடுக்கப்பட்ட பெண்ணின் வேடம். உண்மையில் அவரும் அவ்வாறாக தத்துக்கொடுக்கப்பட்ட பெண்தான்.
         படபிடிப்பில் இரண்டு தினங்கள் மட்டுமே என்னால் இருக்க முடிந்தது. படத்தின் இயக்குனர் தனசேகரன், இணை இயக்குனர் மகேஷ் பெரியசாமி, ஒளிப்பதிவாளர் வெங்கட் , உதவி இயக்குனர்கள் சேரன் , கல்கி , கிருஷ்ண பிரசாத் , சக்தி  ஆகியோர் பிரம்மிக்கத்தக்க அளவில் பணியாற்றியதை பார்க்க முடிந்தது. இரண்டு நிமிடங்கள் வரவேண்டிய காட்சிக்காக இரண்டு மணி நேரம் பேயாய் உழைக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாள் படபிடிப்புக்காகவும் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க, ஒரு திருமணத்தை நடத்துவது போல் முன் தயாரிப்புகள் அவசியமாகின்றன. எல்லாவற்றையும் தாண்டி படம் சிறப்பாக, நினைத்தது போல் வந்துவிட்டால் அதற்கிணையாய் வெறொன்றுமில்லை என்று வானம் வரை எகிறி குதிக்க தோன்றும்.. படக்குழுவினர் அப்படியான மகிழ்ச்சியில் திளைப்பதாக சொன்னார்கள். எல்லா தடைகளையும் தாண்டி மன்னார் வளைகுடா வரும் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்த மகிழ்ச்சியான வேளையில் வலைப்பூ வாசகர்களோடு இந்த இனிமையான செய்தியை பகிர்ந்துகொள்வது மனதுக்கு நிறைவளிக்கிறது.

           திரைப்படம் என்பது ஒரு கடல், அதில் எல்லோரது வியர்வைத் துளிகளும் கலந்தே இருக்கின்றன.. ஆர்ப்பரிக்கும் அலை கால் நனைக்கையில், படும் துளியில் என்னுடையதும் ஒன்று என்ற சிலிர்ப்போடு....

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...