செவ்வாய், 13 ஜூலை, 2010

சுடுநிழல்

புகைப்படங்கள் இல்லாத வரவேற்பறைகள் அத்துனை அழகாய் இருப்பதில்லை. எல்லா புதிய ஒப்பனைகளும், புதிய அடையாளங்களும் களைந்து அவற்றில் தெரியும் அழகற்ற முகங்களுக்கும் ஒரு ஈர்ப்பு சக்தியை எப்படியோ கேமரா ஒளி வழங்கிவிடுகிறது. அறிமுகமில்லாதவர்களின் வீடுகள்கூட எனக்கு பெரும்பாலும் அந்நியமாக இருப்பதில்லை, அந்த வீடுகளின் சுவர்களை புகைப்படங்கள் அலங்கரிக்கும் பட்சத்தில்... எதிர்பாராமல் ஆல்பங்கள் கிடைத்துவிட்டால் அதைவிட மகிழ்ச்சியான தருணம் வேறெதுவும் இல்லை. ஏதேனும் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட உங்களது முகம் ஆல்பத்தில் இருக்கும் என்கிற அனுமானம் இருந்தால் அப்பொழுது அந்த ஆல்பத்தின் ஒவ்வொரு பக்கத்தை புரட்டும்போதும் அவை ஏற்படுத்தும் குறுகுறுப்பு அலாதி சுகம்தான் என்பதை நீங்களும் கூட சில சந்தர்ப்பங்களில் உணர்ந்திருப்பீர்கள். அப்படித்தான் ஒரு அபூர்வமான ஆல்பம் சில சிதிலங்களுடன் எனக்கு என் பாட்டி வீட்டில் பொங்கல் விடுமுறைக்கு போனபோது கிடைத்தது. வீட்டை வெள்ளையடிக்க எல்லா பொருட்களையும் இறக்கி ஓரிடத்தில் சேர்த்தபோது இதுவரை புலப்படாத ஆல்பம் தட்டுப்பட்டது. வெள்ளையடிக்கும்போதும், வீட்டை காலிசெய்ய முற்படும்போதும்தான் நீங்கள் உங்கள் வீட்டின் எல்லாப்பகுதிகளையும் முழுவதுமாக சுற்றிவருவீர்கள். அப்பொழுதுதான் உங்கள் வீட்டில் இதுவரை நீங்கள் பார்த்திராத பகுதிகளும் தென்படும். “ பாட்டி இதென்ன இங்க ஒரு ஆல்பம் கெடக்கு?” “ இந்த வீடு கிரஹப்பிரவேசத்தப்போ எடுத்த ஃபோட்டோல்லாம் அதுல இருக்கு. ஆமா அது எப்படி உன் கையில கிடைச்சுது?” “கூட கொஞ்சம் பழைய ஃபோட்டோல்லாம் இருக்கு போல....” “ ஆமாமா எல்லாத்தையும் அதுலதான் ஒரு சமயம் போட்டுவச்சது. உங்கப்பன் உன் வயசுல மன்னம்பந்தல் காலேஜ்ல படிக்கறச்ச புடிச்ச ஃபோட்டோ கூட அதுலதான் இருக்கு. உன்னை மாதிரி உங்கப்பனும் லட்சணமா இருப்பான்.” கிணறு தோண்ட, புதையல் கிடைத்த மகிழ்ச்சியில் ஓரமாய் அமர்ந்து ஆல்பத்தைப் புரட்டினேன். “ இதென்ன பாட்டி எனக்கு காது குத்தினப்போ எடுத்தது போலிருக்கு” “கிரஹப்பிரவேசத்தோட சேர்த்து உனக்கு காது குத்தினது. அப்பல்லாம் கலர் ஃபோட்டோ எடுக்கற பழக்கமெல்லாம் ஏது? எல்லாம் கறுப்பு வெள்ளைதான் அடையாளம் தெரியுதா உனக்கு?” “ காது குத்தினப்போ எடுத்ததா? அப்போ உன்னோட அழுமூஞ்சியை பாக்கணுமே.” என்றபடி பிரவீணா என்னருகே அமர்ந்தவள், “ ஏன் பாட்டி யார் மடியில உக்காந்து எங்கண்ணன் காது குத்துது?” என்று கேட்க, பொருட்களை எடுக்க உதவியபடி இருந்த அப்பாவும் தாத்தாவும் கூட எங்களருகே வந்தனர். பாட்டியிடமிருந்து எந்த பதிலும் சற்று நேரம் இல்லை. பின்”செம்பரும்புல உங்கப்பாவுக்கு அக்கா முறை சரோஜான்னு பேரு அவ வீட்டுக்காரருதான் அவுரு. உங்களுக்கெல்லாம் மாமா முறை” “ஏன் அப்ப எங்க தண்டு மாமா எங்க போச்சு” பாட்டி சொல்வதா வேண்டாமா என்று திரும்பி அப்பாவைப் பார்த்தாள். “அவங்களுக்கும் அரசல் புரசலாத்தெரியும். சொல்லு பரவாயில்லை” என்றார் அப்பா சன்னமான குரலில். “ அப்பல்லாம் உங்க தண்டபாணி மாமாவுக்கும் உங்களுக்கும் போக்குவரத்து இல்லை. உங்கப்பாதான் உங்க அம்மா வீட்டு சம்மதம் இல்லாம லவ் மேரேஜ் பண்ணிட்டு வந்துட்டான்ல. அந்த கோவத்தில அவங்க வ்ந்து போறது இல்லை. இப்பல்ல ஒரு ஏழெட்டு வருசமா உறவு முளைச்சு வந்துபோயிட்டு இருக்காங்க” “ஆஹா, இங்க பாருங்க தாத்தா, யாரோ ஒரு ஆள் கூட பாட்டி ரொம்ப க்ளோஸா நின்னுகிட்டு இருக்காங்க” பிரவீணா குரலுயர்த்தி சற்று சத்தமாக சொல்ல, திகிலோடு தாத்தாவும் பாட்டியும் அவசரமாகப் பார்த்தார்கள். “அடச்சீ கழுத, அது தாத்தாதான்.. அப்பல்லாம் தாத்தாவுக்கு சுருள் சுருளா முடி முன்னக்க வந்துவிழும்” சொல்லும்போது பாட்டிக்கு வெட்கமும் பெருமிதமும் கலந்து புதிய கிளுகிளுப்பை தந்தது. பாட்டி ரொம்ப அழகாகத் தெரிந்தாள். “ ஓஹோ, அதுலதான் விழுந்திட்டியா பாட்டி நீ? ஆமா தாத்தா, அது என்ன முன்னாடி ரயில் இஞ்சின் லைட் மாதிரி சுருட்டி முடியை ரவுண்ட் கட்டி இருக்க, அதுக்கே ஒரு மணி நேரம் ஆகும் போலிருக்கு...” “ வாயாடி கழுத, அஞ்சு வயசு வரைக்கும் உனக்கு பேச்சே வரலன்னு பதறிப்போயி கழுதப் பாலு அது இதுன்னு குடுத்து உனக்கு பேச்சு வரதுக்குள்ள நாங்க பட்டபாடு...... இப்ப என்னடான்னா நீ இந்த பேச்சுப்பேசற” “நெனச்சேன் இவளுக்கு கழுதப்பாலுதான் குடுத்துருப்பிங்கன்னு” “ஏய், கொஞ்சம் கேப் கெடைச்சா சந்துல சைக்கிளா விடற நீ? இரு.. இரு.. உன்னோட காதுகுத்தி ஃபோட்டோல்லாம் இன்னும் பாக்கியிருக்கு... அம்மா அங்க உள்ள என்ன பண்ணிகிட்டு இருக்க? இங்க வா சீக்கிரம்..” அடுத்த பக்கத்தை மெல்ல புரட்டினேன். “ இது யாரு பாட்டி இந்த பொண்ணு?” என்றேன் புரியாமல் ஒரு ஃபோட்டோவைக்காட்டி. பார்த்த தாத்தா, பாட்டி, அப்பா மூவரும் கொலேரென்று சிரித்தனர்.எப்பேர்ப்பட்ட இறுக்கமான சூழ்நிலையையும் தளர்த்திவிட ஒரு ஆல்பத்தால் முடியும். “ அது வேடிக்கையான கதைப்பா.... உங்கப்பாவுக்கு முடியிறக்க சமயபுரம் போலாம்னு வேண்டுதல். என்னமோ தட்டிகிட்டே போயிட்டே இருந்தது. அதுக்குள்ள முடி நீளமா அழகா பொம்பிளை புள்ளையாட்டம் இருந்தது. மெனக்கெட்டு பின்னிவிட்டா அத்தனை ஜோரா இருக்கும். அப்ப பக்கத்து வீட்டில விஜயான்னு ஒரு பொண்ணு..இப்ப கல்யாணம் ஆகி திருவானைக்காவுல இருக்கா. அவ பெரிய மனுஷியானப்போ உங்கப்பன் ஒரே கலாட்டா. எனக்கும் புடவை எடுத்துக்குடுன்னு ஒரே அடம். அப்பதான் அவ தாவணிய எடுத்து புடவை மாதிரி கட்டிவிட்டு, பூ, பொட்டெல்லாம் வச்சு ஒரு ஞாபகத்துக்காக எடுத்தது.” அம்மாவும் கையைத்துடைத்துக்கொண்டே வந்து சுவாரசியமாக எங்களருகே வந்து பார்த்தாள். சிரிப்பை அடக்க முடியவில்லை அவளுக்கும். “அடடா, யாரு பாட்டி இவ்வளவு அழகா இருக்கா இந்த பொண்ணு” வேறொரு ஃபோட்டோவைக்காட்டி கேட்டேன். “ அது மல்லிகா. அதான் செம்பரும்புல ஒரு மாமா இருக்காருன்னு சொன்னேன்ல. என்னோட ஒண்ணுவிட்ட தம்பி, அவரு பொண்ணு. உங்கப்பா அவளை கட்டிக்கலைன்னு இப்ப அவங்க பேச்சு வார்த்தை கூட இல்லை. அப்புறம் அவளை என்னமோ வடமட்டம் பக்கம் ஜவுளிக்கடைக்காரனுக்கு கட்டிகுடுத்ததா கேள்வி.” “ அடடா மிஸ் பண்ணிட்டியேப்பா. எவ்வளவு அழகா இருக்காங்க. போயும், போயும் இத புடிச்சியே நீ” என்றாள் பிரவீணா அம்மாவைக்காட்டி. “ ஏன் இப்ப அதெல்லாம் ஞாபகப்படுத்தற? இப்ப வருத்தப்பட்டு ஆவப்போறது என்ன” என்று போலியாக முகத்தில் சோகத்தை தேக்கி அப்பா சொல்ல, அம்மா செல்லமாக அப்பா முதுகில் தட்டினாள். “ பாட்டி இது யாரு மணாளனே மங்கையின் பாக்கியம்னு பொதிகையில ஒரு படம் போட்டானே. அதுல நடிச்ச ஹீரோயினா?” “ போடி வாயரட்டை.. அது நாந்தான். அப்பல்லாம் பஃப் கைதான் ஃபேஷன், தாத்தாக்கூட பாரேன். மெனக்கெட்டு முழுக்கை சட்டை தச்சிகிட்டு அத மடிச்சு விட்டுக்குவாங்க அந்த காலத்துல..” “ சண்டைக்குப் போற சண்டியர் மாதிரி.... ஏன் தாத்தா அந்த மீசை என்ன வரைஞ்சதா இல்ல வளர்த்ததா?” தாத்தா பிரவீணாவின் காதைப்பிடித்து மெல்ல திருக, “ சரி.. சரி.. ஒத்துக்கறேன் வளர்த்ததுதான்.” என்ற பிரவீணா இன்னொரு பக்கத்தில் படுத்திருந்த குழந்தையைக்காட்டி “ அய்யய்ய...கசம்.. இது யாரு பாட்டி ?” “ உங்கப்பாதான்... எட்டு மாசத்துல எடுத்தது” “ஒரு ஜட்டி போடக்கூடாது? ஷேம்... ஷேம் பப்பி ஷேம்” வீடே குலுங்கி ஒரு முறை சிரித்தது.அப்பாவின் ஸ்கூல் ஃபோட்டோவைப் பார்த்ததும், எனக்கும் பிரவீணாவுக்கும் அதில் அப்பா யார் என்று கண்டுபிடிக்க சுவாரசியமான போட்டி ஆரம்பித்தது. வேண்டுமென்றே ஏதோ ஒரு அப்பக்கா பையனை காண்பித்து இதுவா, இதுவா என்று இருவரும் அப்பாவை கலாய்த்தோம். வீரபாண்டிய கடபொம்மன் வேஷம் போட்ட புகைப்படத்தைக் காட்டி” ஏம்பா, நாற்று நட்டாயா, களைப் பறித்தாயா எம் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா, மாமனா மச்சானா மானங்கெட்டவனே அப்படின்னு வசனம் பேசியிருப்பியே அத ஒருதரம் பேசி காட்டு” என்று இன்னும் சதாய்க்க, குதூகலமும் கும்மாளமும் பெருகியது. எத்தனை கோடி கொடுத்தாலும் திரும்ப வாழமுடியாத நிமிடங்களை கேமர ஒரு ‘க்ளிக்’கில் சாதித்துவிடுகிறது. அவரவர்களுக்கு தொலைத்துவிட்ட நிமிடத்தில் திரும்ப வாழ்வது போல் ஒரு பிரமை. “ இது யாரு ஒரு பொண்ணு சின்ன்ப்பையன்கூட... பையனைப் பார்த்தா அப்பா முகம் மாதிரிதான் இருக்கு” சட்டென்று ஒரு இறுக்கம் தழுவிற்று. தாத்தா, பாட்டி, அப்பா எல்லோர் முகத்திலும் இருள் சூழ்ந்தது. அடுத்த பக்கத்தை நகர்த்த முயன்ற அப்பாவிடம்“யாருப்பா அது?” என்றேன் மறுபடி. “ அந்த பையன் நாந்தான். அந்த பொண்ணு.....” சற்றுத் தடுமாறி “ அது தெரிஞ்சவங்க பொண்ணு” என்று தலை குனிந்தபடி நகர்ந்தார். பாட்டியும், தாத்தாவும் கூட சத்தமில்லாமல் நகர்ந்தார்கள். மனிதர்கள் பொய் பேசும்போதுதான் எவ்வளவு சகிக்க முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். என்னவோ இதில் இருக்கிறது என்று மட்டும் எனக்கு தோன்றியது. பாட்டி இதை க்ளியர் பண்ண சரியான ஆள் என்று எனக்குத்தெரியும். பாட்டிக்கு துக்கம் தொண்டையை அடைத்தால் அவள் சென்றடைகிற இடம் அடுப்பங்கரை என்றும் தெரியும். மெல்ல அடுப்பங்கரைக்கு சென்றேன். “ பாட்டி என்ன எஸ்கேப் ஆகி இங்க வந்துட்ட?” “ ஒண்ணுமில்ல..” என்று என்பக்கம் திரும்பாமல் எரிகிற அடுப்பை என்னவோ இப்பதான் பற்ற வைக்கிறவள் போல குச்சிகளை செருகியபடி இருந்தாள் பாட்டி. “ இங்க பாரு பாட்டி கஷ்டத்தை எல்லாம் மனசுக்குள்ளயே வச்சுக்கக்கூடாது. கொட்டிடணும். என்கிட்ட மறைக்கலாமா நீ? நான் கேட்டா எதுவும் இல்லன்னு சொல்லமாட்டியே? அடுப்பை சீண்டினது போதும் அது எரிஞ்சுகிட்டுதான் இருக்கு...” சட்டென்று கண்ணில் துளிர்த்த நீர்த்துளிகளைச்சுண்டி அடுப்பு நெருப்பில் எறிந்துவிட்டு, என் கைகளை வாஞ்சையுடன் பிடித்தாள். கரடுதட்டின கைகளுக்குத்தான் எத்தனை சக்தி? எந்த எரிபொருளும் இல்லாமல் என்னுள் பற்றியது சுற்றும் முற்றும் பார்த்தபடி சன்னமான குரலில் சொல்ல ஆரம்பித்தாள்“ அவ உனக்கு அத்தை முறை வேணும்.உங்கப்பாவைவிட ஏழு வயசு மூத்தவ. அத்தனை லட்சணமா இருப்பா. மஹாலட்சுமின்னு அதனாலதான் அவளுக்குப் பேரே வச்சோம். என்னமோ அவ தலைவிதி..” புடைவை தலைப்பை எடுத்து கண்களைத் துடைத்தாள் பாட்டி. “இப்ப எங்க இருக்காங்க?” யாருக்குத்தெரியும் என்பதுபோல கைகளை மேலே உயர்த்திக் காட்டினாள். “ அவ அழகுதான் அவளுக்கு வெனையா போயிடுச்சு. பொம்பளைப்புள்ளை அழகாப்பொறந்துடக் கூடாதுய்யா அதப் பெத்தவங்களுக்கும் கஷ்டம். அதுக்கும் கஷ்டம்” மூக்கைச் சிந்தி பக்கத்திலிருந்த மரத்தூணில் தடவினாள். சுருங்கி சிவந்திருந்த முகத்தில் கண்ணீர் திரண்டு ஓடியது. “ அப்ப இங்கதான்... கும்மோணம் கோர்ட்ல க்ளார்க்கா வேலை பார்த்தான். சவுந்திர பாண்டின்னு ஒருத்தன். ஆளும் ஒண்ணும் அப்பிடி லட்சணமா இருக்க மாட்டான். அவ படிக்கப்போறச்ச எப்பிடி பழக்கமாச்சோ என்ன எழவோ, அவன்கிட்ட அப்பிடி என்னத்தைதான் கண்டாளோ. அவனைத்தான் கட்டிப்பேன்னு ஒத்தக்கால்ல நின்னா. யாரு என்ன சாதின்னு தெரியாம எதுவும் தெரியாம குடுக்க மாட்டேன்னு தாத்தாவும் பிடிவாதமா சொல்லிட்டாரு. அப்புறம் ஒரு நாளு யாருக்கும் தெரியாம அவன்கூடப் போயி சாமிமலையில தாலி கட்டிகிட்டா. உள்ள காலெடுத்து வச்சா வெட்டிப்புடுவேன்னு தாத்தா ஒரே சத்தம். அப்ப உங்க தாத்தாக்கூட பொறந்தவங்க ரெண்டு பேரு அவங்களும் சேர்ந்துகிட்டு அவளை உள்ளயே விடலை” அடைத்துக்கொண்ட தொண்டையை ஒருமுறை செருமி சரி செய்த பாட்டி,” என்னமோ அவனும் நல்லவந்தான். ரெண்டு மூணு வருஷம் இந்த ஊர்லயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடித்தனம் பண்ணினாங்க. அவன் கவர்ன்மெண்டுல வேலை செஞ்சதால அவனை அடிச்சு ஒதைக்க முடியலை. அதான் அவ பண்ணிய ஒரே புண்ணியம். ஒரு பொம்பிளை புள்ளை கூட பொறந்துச்சு. அப்பவும் தத்தாவுக்கு மனசு மசியல. அப்புறம் திருநெல்வேலி பக்கம் மாத்தலாகிப்போனவங்கதான். அப்புறம் அவளைப்பத்தி தகவலே இல்லை. ஒருதரம் மகாமகத்துக்கு இங்க வந்து குளிச்சுட்டுப்போனதா பாக்கியத்தம்மா வந்து சொல்லிச்சு. ரோஷக்காரி வீட்டுப் பக்கம் காலடி எடுத்தே வைக்கலை. இப்ப எங்க இருக்கான்னே... ....” பாட்டியிடமிருந்து வந்த விசும்பல் நெஞ்சை என்னவோ செய்தது. “ கோர்ட்லதான் வேலை பாக்கறதா சொன்னீங்க. ஈசியா கண்டுபிடிச்சுடலாமே. ஒண்ணும் கம்ப சித்திரமில்லையே” “ யாரு மெனக்கெடறது? இத்தினி ஆம்பிளைங்க இப்பிடி கல்லு மனசோட இருக்கறச்ச ஒத்த பொம்மனாட்டி என்ன பண்ண முடியும் சொல்லு?” “ அப்ப அப்பாவை மட்டும் எப்பிடி ஒண்ணும் சொல்லாம ஒத்துகிட்டார்?” “ அதான்...” குரலை சற்று வேகமாக உயர்த்தி, அடுப்பின் ஓரத்தில் வெளியே ஒதுங்கியிருந்த விறகை இன்னும் உள்ளே தள்ளினாள். பட், பட்டென்று வெடித்த விறகிலிருந்து நெருப்புப் பொறி பறந்து வெளியே விழுந்தது. “ அதான்யா... அதான் ஆம்பிளைக்கு ஒரு நியாயம் பொம்பிளைக்கு ஒரு நியாயம். உங்கப்பன் வெவகாரம் காதுலஎன்னமோ கெரகவாட்டம்னு உங்க அப்பனுக்கு புத்தி பேதலிச்சுப் போச்சுன்னு அவன் ஜாதகத்தை எடுத்துகிட்டு ஊர் ஊரா ஜோசியனைத்தேடிகிட்டு ஓடுனாரு.அதுல எவனோ ஒருத்தன் சொன்னானாம், அவன் இஷ்டத்துக்கு அனுசரிச்சுப்போகலைன்னா கொள்ளி போட உங்களுக்கு புள்ளை இருக்கமாட்டான்னு. சரின்னு தாத்தா ஒத்துகிட்டாரு. கொள்ளி என்னா கொள்ளி..... இதோ எரியலை அடுப்பு?” என்று ஒரு குச்சியை எடுத்து உள்ளே செருக முன்னைவிட தகதகவென்று எரிந்தது. “ அதுக்காக உங்கப்பனை குறை சொல்லலை. உங்கம்மாவும் நல்ல பொண்ணுதான். ஒரு குத்தம் குறையில்லை. ஆனா எம்மவ பண்ணுன குத்தம் என்னா? அப்பிடி என்ன கொலைபாதகம் அது?” “ கவலைப்படாதே பாட்டி. இப்பதானே எங்களுக்கு விபரம் தெரிஞ்சிருக்கு. எப்பிடியும் கண்டுபிடிச்சுடுவோம்” “ பிரயோசனம்...?” உதட்டை பிதுக்கிப்பின் “ என்ன பிரயோசனம் சொல்லு? கரிக்கட்டையை மறுபடி வெறகாக்க முடியுமா? பதினஞ்சு, இருவது வருஷம் ஆச்சு அவங்க இங்கேர்ந்து போயி... என்ன இருந்தலும் அவ மகதான் எனக்கு மொதல் பேத்தி.. அவளுக்கு ஒரு காதுகுத்தி, மஞ்சத்தண்ணி, ஏன் ஒரு வேளை கல்யாணம் கூட ஆயிருக்கலாம். அப்பல்லாம் அவ பக்கத்துல ஒரு மக்க மனுஷா இல்லாம எப்பிடியெல்லம் எம்மவ துடிச்சிருப்பா...? போன வாழ்க்கையும், காலமும் திரும்ப வருமா? கேட்டா அவ தலைவிதிம்பாங்க, அவ திமிரும்பாங்க. அது அவளுக்கு மட்டுமில்லைய்யா, பொம்பிளை ஜென்மத்துக்கே விதிக்கப்பட்டதுய்யா.. உங்கம்மாவுக்கு மட்டுமென்ன. சின்ன வயசிலயே உங்கம்மாவைப்பெத்த பாட்டி செத்துப்போயிட்டாங்க. உங்கப்பன் கல்யாணம் பண்றதை அந்த தாத்தா ஒத்துக்கவே இல்லை. அவரு சாவுக்குப்போயிதான் உங்க மாமா உறவு உங்களுக்கெல்லாம்... அதனாலதான் உங்கம்மாவை ஒரு கடுஞ்சொல் சொன்னதில்லை நானு.. அவளும் எம்மவ மாதிரிதானே... இன்னொருதரமா அவ என் வயத்தில பொறந்துடப்போறா? நாந்தான் அவ வயித்துல பொறந்து பாவத்தை அனுபவிச்சு தீக்கணும்....”கண்ணீர்ப் பெருகி அவளது அத்தனை துக்கத்தையும் சுமந்துக்கொண்டு ஓடியது. அதுவரை கையில் தொடும்போதும், கண்ணில் படும்போதும் ‘தண்’ணென்று எப்போதும் இருந்த நிழற்படங்கள் முதல்முறையாகச் சுட்டது. அடுப்படி வாசலருகே நின்றபடி தாத்தா,” என்ன வடிவு, என்ன அடுப்பில ஒரேடியா பொகையுது” என்றார் எரிச்சலோடு. “ ஒண்ணுமில்ல.. ஈரம்... அதான் பொகையுது..”கண்களைத் துடைத்தபடி பாட்டி.. எனக்கு மட்டும் புரிந்தது இந்த புகைச்சல் யுகயுகமாய்த் தொடர்வது என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...